எரிபொருள் நுகர்வை குறையுங்கள்: பொதுமக்களிடம் கோரிக்கை
மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தம்மால் இயன்றவரை எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமை இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு இடம்பெறாதிருந்தால், இந்த மாத இறுதி வரை பழைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளதால், இதற்கு கூட்டாக முகம் கொடுக்காவிட்டால் கடும் அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், எனவே நுகர்வைக் கட்டுப்படுத்துமாறும் அவர் மீண்டும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Reviewed by Vijithan
on
March 10, 2026
Rating:


No comments:
Post a Comment