மன்னாரில் மணல் அகழ்வு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கூட்டம் இழுபறியில் முடிவு:- மன்னார் நகர சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர்கள் வெளிநடப்பு
மன்னார் மாவட்டத்தில் மணல் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று (7) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்ற நிலையில்,குறித்த கூட்டத்தில் இருந்து மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் தவிசாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துதல் மற்றும் மணல் விலையை முறைப்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வழிகாட்டலில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் குறித்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள் , திணைக்கள அதிகாரிகள்,
நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் ,மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மணல் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை யைக் கட்டுப்படுத்துதல்,அனுமதிப்பத்திரமின்றி முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுகளைத் தடுத்தல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்குவது குறித்து ஆலோசித்தல் குறித்து ஆராயப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மன்னார் நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அதிரடியாக வெளியேறினர்.
முன்னைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு முரணான வகையில் இன்றைய கூட்டத்தின் போக்கு அமைந்துள்ளது.
மக்களின் நலனை புறந்தள்ளி எடுக்கப்படும் இவ்வாறான முடிவுகளை ஏற்க முடியாது. மன்னார் மாவட்டத்தில் மணல் மாபியாக்கள் செயல்பாடு தொடர்பில் சுட்டிக்காட்டி மன்னார் மாவட்டத்தை நாசம் செய்வது தொடர்பில் தங்களது கருத்தை வெளியிட்டு வெளிநடப்பு செய்தனர்.
மணல் விலையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஏனைய தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. நீண்ட நேர விவாதங்களின் பின்னரும், முறையான விலை நிர்ணயம் அல்லது மணல் அகழ்வு தொடர்பான உறுதியான முடிவுகள் எதுவும் தெரிவிக்க முடியாத நிலையில் கூட்டம் நிறைவுக்கு வந்தது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலை தொடர்கிறது.எனினும், முறையான தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இக்கூட்டம் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளது
Reviewed by Vijithan
on
May 07, 2026
Rating:

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)



No comments:
Post a Comment