பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்!
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவத் தந்தையையும் மகனையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மீன்பிடி, நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடியாகத் தலையிடு செய்துள்ளார்.
கடந்த ஜூன் 19 ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த 'சோமிரச' படகிலிருந்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகனான எஸ். எச். சமிந்த ஆகியோரே இவ்வாறு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த மீனவர் ஒருவர் வேறு படகொன்றின் மூலம் கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.
எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்துள்ளனர்.
படகில் படகு கண்காணிப்பு அமைப்போ (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி இயந்திரமோ இல்லாதிருந்தமையால், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவது கடினமாகியிருந்தது.
அவர்களைக் கண்டறிவதற்காகக் கடற்படையும் விமானப்படையும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை.
இருப்பினும், நிலவும் கடல் நீரோட்டங்களுக்கு ஏற்பப் படகு தொலைதூரப் பகுதிக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததன் அடிப்படையில், வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் அறியத்தரப்பட்டிருந்தது.
அதற்கமைய, குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு அடித்துச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் மீனவர்கள் குழுவொன்றினால் அதிலிருந்த தந்தையும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு நாள் வரை பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்தி கிடைத்தவுடன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்.
பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்!
Reviewed by Vijithan
on
July 27, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 27, 2026
Rating:


No comments:
Post a Comment