யாழ் புகையிரதத்தில் அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை; 5 லட்சம் அபராதம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் இயங்கி வந்த நடமாடும் சிற்றுண்டிச்சாலை பிரிவு ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாவை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் தண்டப்பணமாக விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்டப் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விசேட திடீர் சோதனை
கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனையின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 96 ஆம் இலக்க உத்தரவை மீறியதற்காகக் குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்த அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 500,000 அபராதம் விதித்தது.
புகையிரதங்களின் நடமாடும் சிற்றுண்டிச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகையிரத திணைக்களத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை முறைப்படியாக அறிவித்துள்ளது.
நுகர்வோர் சட்டங்களை மீறியதற்காக இந்த நிறுவனத்திற்கு எதிராக முன்னரும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்திலும் குறித்த நிறுவனத்தின் சேவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், மீண்டும் சட்டமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்து்ளளது.
Reviewed by Vijithan
on
July 31, 2026
Rating:


No comments:
Post a Comment