மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை யை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நேர்மை வாரம் இன்று (27) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது டன், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரச சேவையில் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களை பேணுவதற்கும், பொதுமக்களுக்கு திறமையானதும் நியாயமானதுமான சேவையை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய நேர்மை உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குதல், அரச நிறுவனங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேசிய நேர்மை வாரம் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகிறது.
தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களில் நேர்மைக் கலாசாரத்தை மேம்படுத்தல், நிதி மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகளில் பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், சமூக மற்றும் தார்மீக விழுமியங்களை மேம்படுத்துதல், சிறந்த சேவை வழங்கலை உறுதிப்படுத்துதல் மற்றும் வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர்,பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Vijithan
on
July 27, 2026
Rating:


No comments:
Post a Comment