நியமனம் வழங்கியதில் மோசடி... செல்வம் எம்.பி
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத்தேர்வு இடம்பெறாமல் முறைக்கேடாக நியமனம் வழங்கப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் உள்ள பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பித்த எவருக்கும் நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் எவையும் கிடைக்கவில்லை. நேர்முகத்தேர்வு இடம்பெறாத நிலையில் 92 பேர் குறித்த பதவி வெற்றிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடான நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறித்த 92 பேருக்கும் அமைச்சரின் சிபாரிசின் மூலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேர்முகத்தேர்வின்றி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்ணப்பித்து நேர்முகத்தேர்விற்காக காத்துக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
குறித்த முறைகேடான நியமனத்திற்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.
குறித்த அநீதியான நியமனத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னாரில் சிற்றூழியர்களை தெரிவு செய்ய தற்போது நடாத்தப்பட்டு வரும் நேர்முகத் தேர்வுகள் எந்த வகையில் நீதியாக இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
நியமனம் வழங்கியதில் மோசடி... செல்வம் எம்.பி
Reviewed by Admin
on
April 27, 2012
Rating:

No comments:
Post a Comment