மன்-முள்ளிக்குளம் பாடசாலையை தொடர்ந்தும் ஆரம்பிக்க கடற்படையினர் அனுமதி.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கடந்த 5 வருடங்களின் பின் மீண்டும் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது கடற்படையினர் குறித்த பாடசாலை மாணவர்களையும்,ஆசிரியர்களையும் பலவந்தமாக வெளியேற்றிய நிலையில் உயர் அதிகாரிகளின் முயற்சியினால் குறித்த பாடசாலையை மீண்டும் நடத்த கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தெரிவித்தார்.
நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தமது கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர்.
மீண்டும் 2012 ஆம் ஆண்டு மீள் குடியேறிய போது முள்ளிக்குளம் மக்கள் அந்த கிராமத்தில் மீள் குடியேற அனுமதி மறுக்கப்பட்டனர்.
முள்ளிக்குளம் மக்களுடைய வீடுகள் கொண்ட பகுதியினர் கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்திள்ளனர்.
இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள குறித்த பாடசாலையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதே அந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளருடன் இவ்விடயம் தொர்பில் கதைத்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த பாடசாலையினை 3 ஆம் தவணையில் இருந்து ஆரம்பிப்பதற்கு அனுமதியளித்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளும் 3 ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட போது முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.
தரம் 01 தொடக்கம் 09 வரை வகுப்புக்களைக் கொண்ட குறித்த பாடசாலை 5 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது 25 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.
இதன் போது மதச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் பாடங்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது குறித்த பாடசாலையினுள் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உடனடியாக அனைவரையும் வெளியேறுமாறு வற்புறுத்தினர்.
இதற்கமைவாக அனைவரும் குறித்த பாடசாலையில் இருந்து வெளியேறி வெளியில் வந்தனர்.
இவ்விடையம் தொடர்பிலும் கடற்படையினரின் குறித்த செயற்பாடுகள் குறித்தும் குறித்த கிராம மக்கள் மன்னார் வலயக்கல்விப்பணிமனையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் கடற்படை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தற்போது குறித்த முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள பாடசாலையினை தொடர்ந்தும் நடத்த கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய மீனவ ஒத்துளைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை மேலும் தெரிவித்தார்.
மன்-முள்ளிக்குளம் பாடசாலையை தொடர்ந்தும் ஆரம்பிக்க கடற்படையினர் அனுமதி.
Reviewed by NEWMANNAR
on
September 07, 2012
Rating:

No comments:
Post a Comment