இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நவிபிள்ளை குழுவினரிடம் மனு கையளிப்பு
ஐ நா வின் மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவபிள்ளை இலங்கையில் பல்தரப்பினரை சந்தித்து பேசிவரும் நிலையில், அங்குள்ள சுதந்திர ஊடக அமைப்பினர் அவரது குழுவினரைச் சந்தித்து மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
நாட்டில் இருக்கும் ஊடக அடக்குமுறைகள் குறித்தும் ஐ நா அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறையினர் கூறுகிறார்கள்.
ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது, அச்சுறுத்தலுக்கு உள்ளாவது, காணாமல் போவது உட்பட பல விஷயங்கள் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஐ நா குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயலர் நிக்ஸன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஏழு ஊடக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக நவிபிள்ளை அவர்களுடன் வந்திருந்த குழுவினரை சந்தித்து பேசிய போது, இலங்கையில் ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதேபோல நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரையப்பட்டிருந்த போதிலும், இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது சட்டமாக்கப்படவில்லை என்பதையும் தமது தரப்பு ஐ நா குழுவினரின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் நிக்ஸன் தெரிவித்தார்.
ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக, சட்ட ஏற்பாடுகள் எதையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்பதையும் தாங்கள் எடுத்துக் கூறியதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனினும் இலங்கை அரசுடன் பேசி அங்கு ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவது குறித்து எந்த உறுதிமொழியையும் ஐ நா அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நவிபிள்ளை குழுவினரிடம் மனு கையளிப்பு
Reviewed by Admin
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment