யாழ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமது பிரசினைகளை விளக்கவுள்ள மன்னார் மீனவர்கள்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெறவுள்ள ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லும் மீனவர்கள் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே அங்கு கலந்து கொள்ள செல்வதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
பேச்சு வர்த்தைகளின் பின்பும் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் இழுவைப்படகுகளின் தொழில் முறை ஊடாக இந்திய மீனவர்கள் எமது கடற்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டு இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது.
-தென்பகுதி மீனவர்கள் வட கடல் எல்லைக்குள் தொடர்ச்சியாக வந்து தொழில் செய்து வருகின்றமையினால் வட பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது.
காப்புறுதி மற்றும் தொழில் பாதுகாப்பு அங்கி போன்றவற்றிற்காக மீனவர்கள் பெரும் தொகை பணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
-காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய தொழில் பாதிப்புக்களால் பாதிப்படைந்துள்ள மீனவர்களுக்கு இது வரை அரசு எந்த கொடுப்பனவுகளையும் வழங்கவில்லை.
-எனினும் வடபகுதி மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையிலே தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு மீனவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவே மன்னார் மாவட்ட மீனவர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள செல்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமது பிரசினைகளை விளக்கவுள்ள மன்னார் மீனவர்கள்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2014
Rating:

No comments:
Post a Comment