மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சில ஆண்டுகள் ஆகலாம்: அமெரிக்கா தெரிவிப்பு
இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய பயணிகள் விமானத்தைக் கண்டுபிடிக்க சில வருடங்கள் ஆகலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டறியும் ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
எனினும் கறுப்புப் பெட்டியின் மின்கலம் செயலிழப்பதற்கு முன்னர் அதை கண்டுபிடித்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்புப் பெட்டியானது விபத்து நிகழ்ந்த 30 நாட்கள் வரை செயலில் இருக்கும். மலேசிய விமானம் காணாமல் போய் 3 வாரங்களுக்கு மேலாகிய நிலையில் இதுவரை கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விமானம் தேடப்படும் இடத்தில் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பத்து விமானங்களும், எட்டு கப்பல்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேடலில் ஈடுபட்டுள்ள கப்பல்களில் ஒன்றான அவுஸ்திரேலியக் கப்பலில் காணாமல்போன விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கான ரேடார் ஒன்றும் இருக்கிறது.
கடல் மட்டத்துக்கு கீழே ஆறு கிலோமீட்டர்கள் ஆழத்திலிருந்து சமிக்ஞை வந்தாலும்கூட கப்பலில் உள்ள இந்த ரேடார் அடையாளம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காணாமல்போன மலேசிய விமானத்தில் பயணித்த சீன பிரஜைகளின் உறவினர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வெளிவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
விமானத்திற்கு என்ன ஆனது? என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று கூறியமைக்காகவும், தகவல்களை வெளியிடுவதில் தாமதம் நிலவியமைக்கும் மலேசிய அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சில ஆண்டுகள் ஆகலாம்: அமெரிக்கா தெரிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:

No comments:
Post a Comment