


விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் உள்ள பஞ்சபூர் என்ற இடத்தில் கடந்த 24ம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும்போது, '
ஈழ விடுதலை ஒன்று தான் நம் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம். அதனை அடைவதற்கான தொடக்கம் தான் 2016 தேர்தல். பிரபாகரனை நான் சந்தித்த போது, "உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அணுகுண்டு போன்றவை. அதை வைத்து புரட்சி செய்" என்றார்.
இலங்கையில் நடந்த இனஅழிப்பை தி.மு.க., அ.தி.மு.க. தடுக்கவில்லை, தமிழர்களை காக்கவில்லை. தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆள்மாற்றம் நடக்கிறது.
சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இனப் படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அ.தி.மு.க. அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமைய வேண்டும். தனி ஈழம் மட்டும் தான் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஏற்றது. என்று உரையாற்றியிருந்தார் சீமான்.
இந்த மாநாட்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது நேற்று மாலை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக குரல், இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளான 128A, 143, 153A, 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி எடமலைபட்டி புதூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடமலைப்பட்டி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment