மாணவியின் கொலை தொடர்பில் கைதானவர்களின் விசாரணைகளில் ஒருவர் பொலிசாரிடம் வாக்கு மூலம்
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்தார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேருமே மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களும் புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் உறவினர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் உயிரிழந்த மாணவிக்கும் அவர்கள் எட்டு பேரும் ஒரு முறையில் உறவினர்கள் ஆவார்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில்,
நாங்கள் கொழும்பில் இருந்து வந்து கடந்த 13ம் திகதி புதன்கிழமை காலை புங்குடுதீவில் மது அருந்திக்கொண்டு இருந்தோம் அந்தவேளை 14ம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் எனக்கு தொலைபேசியில் பொண்ணு ஒன்று இருக்கு வா என ஒரு இடத்தை சொல்லி அழைத்தார்.
அதையடுத்து நாங்கள் அந்த இடத்திற்கு காரில் சென்றோம். அங்கே ஒரு பெண்ணைக் கடத்தி பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய நிலையில் இருந்தார்கள்.
அந்த பெண் எமக்கு ஒரு முறையில் உறவினர் கூட . அந்தநேரம் நாம் மது மயக்கத்தில் இருந்ததால் நாமும் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தினோம்.
பின்னர் நாம் காரில் காலை 10 மணியளவில் கொழும்பு நோக்கி சென்றுவிட்டோம். மறுநாளே எமக்கு அந்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்தது.
நாம் செல்லும் போது அந்த பெண் உயிரிழக்கவில்லை. அவரது கைகள் பின்னால் தான் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கைகள் தலைக்கு மேல் விரித்து இரண்டு மரங்களில் கட்டப்பட்டது தொடர்பில் எமக்கு தெரியாது.
எமக்கு அயிட்டம் (பெண் ) இருக்கு என்று சொல்லி அழைத்தவர். ஏற்கனவே ஒரு திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
அவரை பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தது உயிரிழந்த பெண்ணின் தாயாராவார். எனவே தாய் மீதான கோபத்தினாலேயே அவர் அந்த பெண்ணை கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் எம்மையும் அழைத்து இருந்தார்.
தாயின் மீதான கோபத்தினால் தான் அவர் அந்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்து இருக்கலாம்.
அதனை அடுத்து நாம் புங்குடுதீவுக்கு வந்து அந்த பெண்ணின் இறுதிக் கிரியைகளிலும் கலந்து கொண்டு இறுதிக் கிரியைகளில் உதவிகளையும் முன்னின்று செய்தோம்.
அதன் பின்னர் இன்று (ஞாயிறு) இரவு மீண்டும் கொழும்பு நோக்கி செல்ல இருந்தோம் அந்த நிலையிலையே பொலிசார் எம்மை கைது செய்துள்ளனர் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவியின் கொலை தொடர்பில் கைதானவர்களின் விசாரணைகளில் ஒருவர் பொலிசாரிடம் வாக்கு மூலம்
Reviewed by NEWMANNAR
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment