வைகோவின் தாயார் காலமானார்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயோதிபம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரை பாளை ஐகிரவுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அருகில் இருந்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 9.15 மணியளவில் மாரியம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.
மரணமடைந்த மாரியம்மாளின் கணவர் வையாபுரி. இவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வைகோ, ரவிச்சந்திரன் என்ற 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.
வைகோ மாணவர் பருவத்தில் தி.மு.க.வில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும். பின்னர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கிய போதும் மாரியம்மாளிடம் ஆசி பெற்றே வைகோ கட்சியை தொடங்கினார்.
அரசியல் சமூக பணிகளில் இவர் அதிக ஆர்வம் உடையவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்கு சென்று இவரை சந்தித்து பேசி உள்ளனர்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருமுறையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட போதும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
சமீபத்தில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தின் போதும் மாரியம்மாள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவின் தாயார் காலமானார்!
Reviewed by NEWMANNAR
on
November 06, 2015
Rating:

No comments:
Post a Comment