வெள்ளத்தில் சிக்கிய 239 ஹெக்டயர் நெல்வயல்...

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் தம்பிலுவில் ஆகிய 7 விவசாய வலயங்கள் உள்ளன. இந்தப் வலயங்களுக்குட்பட்ட பகுதிகளிலேயே மேற்படி பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, பகுதியளவிலும் ஆயிரக்கணக்கான ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாய பிரதிப் பணிப்பாளர் கலீஸ் மேலும் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும் போகத்தில் 68 ஆயிரத்து 300 ஹெக்டயர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1414 ஹெக்டயர் நெல் வயல்கள் 25 வீதம் பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.
அதேவேளை, 1046 ஹெக்டயர் நெல் வயல்கள் 50 வீதமான பாதிப்புகளையும், 1602 ஹெக்டயர் நெற் காணிகள் 75 வீதமான பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், மேலும் ஒரு தொகுதி நெற் பயிர்கள் காணப்படுவதாகவும், இவை தொடர்பில் இன்னும் தகவல்கள் பெறப்படவில்லை என்றும் அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உப உணவுப் பயிர்கள் மற்றும் மரக்கறிப் பயிர்களும் சீரற்ற காலநிலை காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விதைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வயல்கள் பாதிக்கப்பட்டு முளைகள் அழுகிப் போனமை காரணமாக, கணிசமான வயல்களில் மீள் விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக, நெல் வயல்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றன.
வெள்ளத்தில் சிக்கிய 239 ஹெக்டயர் நெல்வயல்...
Reviewed by Author
on
December 11, 2015
Rating:

No comments:
Post a Comment