வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல மக்களுக்கு அனுமதி....
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 201.3 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக பாதுகாப்பு அமைச்சினால் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் தொடக்கம் மக்கள் தங்கள் பகுதிகளுக்கு சென்று காணிகளை அடையாளம் காண்பதற்கும், மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
குரும்பசிட்டி(ஜே-238), கட்டுவன்(ஜே-242) ஆகிய பகுதிகளில் 126 ஏக்கர் நிலம், வறுத்தலை விளான்(ஜே-241) பகு தியில் 12 ஏக்கர் நிலம் மற்றும் காங்கேசன்துறை புகையிரத நிலையம் அமைந்துள்ள பகுதியை உள்ளடக்கியதாக 63.3 ஏக்கர் நிலம் ஆகியன உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கான நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டு, நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக யாழ்.மாவட்ட செயலர் என்.வேதநாயகனிடம் கையளித்ததுடன், சில மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக காணிகள் வழங்கப்பட்டதற்கான அத்தாட்சி பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வலி,வடக்கு மக்களை 6 மாதங்களில் மீள்குடியேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வழங்கிய உத்தரவாதம் அந்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படாத நிலையில் அடுத்தகட்டமாக வலி, வடக்கு மக்கள் ஜனாதிபதிக்கு 1 மாதகால அவகாசம் வழங்கி அதன் பின்னர் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மேற்படி நிலம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி மற்றும் முப்படை அதிகாரிகள், யாழ்.மாவட்டச் செயலர், வட மாகாண ஆளுநர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல மக்களுக்கு அனுமதி....
Reviewed by Author
on
June 25, 2016
Rating:

No comments:
Post a Comment