உலக வங்கியின் அதிகாரிகள் குழு விக்னேஷ்வரனுடன் கலந்துரையாடல்.....
யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அன்ற்மாரி டில்ஷன் தலமையிலானஅதிகாரிகள் குழு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் மேற்படி உலக வங்கியின் அதிகாரிகள் சுமார் 1 மணி நேரம் முதலமைச்சருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் குறிப்பிடுகையில்,
நெல்சிப் திட்டத்தின் 2ம் பகுதி தொடர்பாகவும், விவசாயத்துறை நவீன மயப்படுத்தல் தொடர்பாகவும், மூலோபாய நகரங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே அவர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது யாழ்.நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாக பேசியிருக்கின்றோம். மேலும் விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.
விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் தொடர்பாக பேசுகையில், குறிப்பாக நாங்கள் வழக்கத்தின் அடிப்படையில் சில விவசாய நடவடிக்கைகளுக்கான சில முறைகளை கையாண்டு வருகின்றோம். ஆனால் வியாபாரநோக்கம், காலநிலை, நிலத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சில மாறுதல்களை மேற்கொள்ளலாம். அவை தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம்.
இதேவேளை வடமாகாணத்தில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான வாழ் வாதாரம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் தொடர்பாக உலகவங்கி உதவிகளை வழங்கும். என கூறியிருக்கின்றார்கள். அதனை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு அவ்வாறான உதவிகள் நிச்சயமாக தேவை என்பதையும் நாங்கள் வலியுறுத்தி கேட்டிருக்கின்றோம்.
இதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் முதலீட்டாளர்களுக்கு அரசியல் ரீதியான பாதிப்புக்களுக்கான காப்புறுதி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
உலக வங்கியின் அதிகாரிகள் குழு விக்னேஷ்வரனுடன் கலந்துரையாடல்.....
Reviewed by Author
on
August 30, 2016
Rating:

No comments:
Post a Comment