புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ்-வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு.-Photos
மன்னார் கல்வித்திணைக்களத்தின் கீழ் புத்தளத்தில் இயங்கி வரும் இணைந்த பாடசாலைகளின் கல்வி வசதிகளையும் அங்கே பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும் வட மாகாண சபையின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே தாம், அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களின் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றுகையிலேயே இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட் பதியுதீன் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,
புத்தளத்தில் அகதி மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட இணைந்தப் பாடசாலைகளில் ஒரு சிலவற்றில் சுமார் 1000 மாணவர்களும் இன்னும்; சில பாடசாலைகளில் சுமார் 300 மாணவர்கள் வரை கல்வி கற்;கின்றனர்.
இந்தப் பாடசாலைகளில் கணிசமான ஆசிரியர்களும் கல்வி கற்பிக்கின்றனர்.
வட மாகாணத்தில் சமாதான சூழல் ஏற்பட்ட போதும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மக்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறுவதிலுள்ள தடைகள் எல்லோருக்கும் தெரியும்.
எடுத்த எடுப்பில் இந்தப் பாடசாலைகளை மூடிவிட்டு மாணவர்களை அந்தரத்தில் விட முடியாது.
புத்தளத்தில் இயங்கும் இந்தப் பாடசாலைகளை வட மாகாணசபை நிர்வகிப்பதால் அந்த சபை இதனால் தமக்கு பாரிய கஸ்டம் என அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றது.
இதனாலேயே அந்தச்சபையின் சுமையைக் குறைப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட தென்று அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர்களான பா.டெனிஸ்வரன்,பா.சத்தியலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன் , சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் ,பிரதேசச் செயலாளர்கள் அழைக்கப்பட்ட திணைக்களத்தின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ்-வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 21, 2016
Rating:

No comments:
Post a Comment