'பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு' யாழில் மாபெரும் பேரணி
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பேரணி யாழ். பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் பேரணி தற்போது பலாலி வீதியூடாக யாழ். மாவட்ட செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் நூற்றுக் கணக்கான வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள்,
“பட்டதாரிகளுக்கு வேலை இல்லை எனில் பட்டப்படிப்பு எதற்கு?, பட்டதாரிகளுக்கு வேலை இல்லை எனில் பல்கலைக் கழகத்தை இழுத்து மூடு, அரசியல் வாதிகள் ஏசியில் நாங்கள் வீதியில்....” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆவேசத்துடன் எழுப்பிக் கொண்டு செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் மத்திய மற்றும் மாகாண அரசை கண்டித்து பல்வேறு பதாதைகளையும் தாங்கியுள்ளனர்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான அரசாங்க வேலை வாய்ப்பு வழங்க கோரி கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் இன்று 38 ஆவது நாளை எட்டியுள்ளது.
ஆனால் இதுவரை தாம் அமைதியாக போராடி வருகின்ற போதும் வடமாகாண சபையோ அல்லது மத்திய அரசாங்கமோ தமக்கான அரச வேலைவாய்ப்பை பெற்றுத் தருவது தொடர்பில் எழுத்து மூலமான எந்தவொரு உறுதிமொழிகளையையும் வழங்காமை பெரும் ஏமாற்றத்தை தருவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே இன்று மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணி யாழ். மாவட்டச் செயலக முன்றலில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்றால் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு' யாழில் மாபெரும் பேரணி
Reviewed by Author
on
April 05, 2017
Rating:

No comments:
Post a Comment