வவுனியாவில் 100 நாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100ஆவது நாள் ஊர்வலத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்.
வவுனியாவில் இன்றுடன் 100ஆவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருப்பினும் பூஜைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளாது திரும்பிச் சென்று விட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 'நாம் அமெரிக்காவின் உதவியைக் கோருகிறோம்' என எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் அமெரிக்க கொடியை ஏந்தியவாறு ஊர்வலம் மேற்கொண்டமையால் குறித்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம்பெறுவதால் தாம் கலந்து கொள்ளவில்லை என மக்கள் பிரதிநிதிகள் சிலர் ஊடகவியலாளிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனநாயக போராளிகள் கட்சிப்பிரதிநிதிகள் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட போதும் ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
வவுனியாவில் 100 நாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள்
Reviewed by Author
on
June 04, 2017
Rating:

No comments:
Post a Comment