அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் சனத்தொகை வீதத்தில் பெரும் வீழ்ச்சி! -


கடந்த-1980ஆம் ஆண்டுக்கு முன்னர் குறிப்பாக யுத்தத்திற்குமுன்னர் வடமாகாணத்தில் சாதாரணமாகவொரு குடும்பம் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தது. 16 பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் கூடஅக்காலத்திலிருந்தன என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுடன் நாங்கள் முடித்துக் கொள்கின்றோம். இதன் காரணமாக எங்களுடைய சனத்தொகைப் பெருக்க வீதத்தில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் முன்னணி ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழும் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நேற்று பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் 1, 007 பாடசாலைகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 1, 007 பாடசாலைகளிலும் 120 பாடசாலைகளில் 20 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.
யாழ்.மாவட்டத்திலும் கூட 20 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.வன்னிப் பகுதியில் இதன் எண்ணிக்கை அதிகமானதாகவுள்ளன. வடமாகாணப் பாடசாலைகளில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதற்குக் கடந்த காலயுத்தமே வழி வகுத்துள்ளது.
யுத்தம் சுமார் நான்கு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது. இவ்வாறு கொன்றொழிக்கப்பட்ட மற்றும் யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களில் சுமார்- 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம்.
இந்த வயதெல்லையே பிறப்பினைஉருவாக்கக் கூடிய வயதெல்லையாகும். ஆகவே, கடந்த-30 ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைப் பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.

பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணம். இலங்கையில் தற்போது சனத் தொகைப் பெருக்க விகிதத்தை இன அடிப்படையில் நோக்கினால் 1, 000 பேருக்கு 8.5 முஸ்லீம்களும் , 1, 000 பேருக்கு 5.7 சிங்களவர்களும், 1, 000 பேருக்கு 1.5 என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் காணப்படுகிறார்கள். ஆகவே, இலங்கையின் தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் சனத்தொகை வீதத்தில் பெரும் வீழ்ச்சி! - Reviewed by Author on November 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.