வடமாகாணத்தில் அமைச்சர்கள் யார்? -
வடமாகாண அமைச்சர்கள் யார்? என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தவிர்ந்த வேறு யாரும் சபைக்கு பொறுப்புகூறும் உரிமை அற்றவர்கள் என வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சுகாதார அமைச்சரிடம் வாய்மொழிமூல கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்டு கருத்து கூறும்போதே எதிர்கட்சி தலைவர் தவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கலாம். ஆனால் வேறு எவரும் பதிலளிக்க இயலாது. காரணம் சட்டரீதியாக மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்கள்.
இங்குள்ள மற்றைய அமைச்சர்கள் யார்? என்பது உறுதிப்படாத நிலையில் ரவிகரனின் கேள்விக்கு முதலமைச்சர் தவிர்ந்த மற்றைய யாரும் பதிலளிக்க இயலாது என கூறினார்.
இதனையடுத்து அந்த விடயத்தில் தலையிட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,
மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் வாய்மொழிமூல கேள்வியை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்ததுடன், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா சபைக்கு கொண்டுவரவுள்ள விசேட கருத்து ஒன்றுக்கு அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து கூறுகையில்,
முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் தான் பதவிநீக்கப்பட்டது தொடர்பாக, டெனிஸ்வரனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்ற இடைக்காலத் தடை உத்தரவு கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.
இவ் இடைக்காலத்தடை உத்தரவின் அடிப்படையில் டெனிஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்கின்றார் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபை ஒன்றிற்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களிற்கு மேல் இருக்க முடியாது. ஆனால் இன்று வடக்கு மாகாண சபையில் ஆறு அமைச்சர்கள் செயற்படுகின்றார்கள்.
இவ் விடயம் சீர்செய்யப்படாத நிலையில் ஆளுநர் அமைச்சரவையைக் கூட்ட வேண்டாமென்று பிரதம செயலாளரிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஆதலால் முதலில் இந்த மாகாண சபையில் யார் அமைச்சர்கள் என்று எமக்கு முதலமைச்சர் அவர்களால் ஒழுங்கு செய்யப்படும் வரை சபையில் அமைச்சர்களிற்குரிய ஆசனங்கள் ஒழுங்கு செய்யப்படக் கூடாதென அவைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேன்.
அரசியலமைப்பின் பிரகாரம் சபையின் முக்கிய செயற் பாடுகளிலொன்று அமைச்சர்கள் சபைக்குக் கூட்டாகப் பொறுப்புடையவர்களாதலும் வகை கூறலும் ஆகும்.
இன்று அமைச்சர்களே யாரென்று தெரியாத சபையில் நாம் கூட்டுப் பொறுப்பினையும், கூட்டு வகை கூறலையும் எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும்? இதற்கு நிரந்தரமான தீர்வொன்று உடனடியாகக் காணப்படல் வேண்டும்.
இன்றேல் இச்சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தல் அர்த்தமில்லாத ஓர் செயற்பாடு ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் அமைச்சர்கள் யார்? -
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment