தாயகம் திரும்ப அஞ்சும் ஈழ அகதிகள்! பின்னணியில் மகிந்த -
தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் இலட்சக்கணக்கானவர்கள் மீண்டும் நாடு திரும்பாமைக்கான காரணத்தை த டைம்ஸ் ஒப் இன்டியா வெளியிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் 3000 வரையிலான ஈழ அகதிகளே மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அகதிகள் மீள நாடு திரும்ப மறுக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் இலங்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி வரலாம் என்ற அச்சத்தின் காரணமாகவும், வெளிப்படுத்த முடியாத ஒரு பீதியின் காரணமாகவும் பலர் மீள நாடுதிரும்ப மறுக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நிலையின் காரணமாகவும், வேலைவாய்ப்பு இன்மை மற்றும் மீண்டும் இனப்பிரச்சினைகள் ஏற்படலாம் போன்ற பல்வேறு காரணங்களாலும் இவ்வாறு அகதிகள் மீள தாயகம் திரும்ப தயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்திய அரசாங்கமும் கூட இலங்கைக்கு குறித்த அகதிகளை மீள அனுப்புவதில் ஏதுவான நிலை ஒன்றை கொண்டிருக்கவில்லை என்றும், இலங்கையில் இன்னமும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படவில்லை என்று அறிவதன் காரணமாக ஈழ அகதிகளை இலங்கைக்கு மீண்டும் அனுப்ப இந்தியா தயாரில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் போதுமான வேலை வாய்ப்புகள் இன்மை காரணமாக குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் அகதிகள் மேலை நாடுகளுக்கு கள்ளத்தனமாக செல்வதுடன், அங்கு புகலிடக்கோரிக்கையாளர்களாக தஞ்சமடைகின்றனர்.
இந்தியாவில் உள்ள அகதிகள் முறையாக தாயகம் திரும்ப, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வேலை வாய்ப்பை உருவாக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பது மட்டுமின்றி இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை உருவாக்க முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.
தாயகம் திரும்ப அஞ்சும் ஈழ அகதிகள்! பின்னணியில் மகிந்த -
Reviewed by Author
on
August 30, 2018
Rating:

No comments:
Post a Comment