மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் கார்டனர் ஆலன் (65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.
அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் சியாட்டில் நகரில், 1953 ஜனவரி 21ல் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போதே கணினியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
14 வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போதுதான் தன்னைப் போலவே கம்ப்யூட்டரில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு கம்ப்யூட்டருக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.
1975-ம் ஆண்டில் இவர்கள் இருவரும் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நிறுவினர்.
1981-ம் ஆண்டில் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் ஹஐடியா மேன்’, ‘மேன் ஆஃப் ஆக்ஷன்’ என்று அழைக்கப்பட்டார்.
புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார்.
ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
Reviewed by Author
on
October 17, 2018
Rating:

No comments:
Post a Comment