ராஜீவ் வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: சீமான் அதிரடி -
முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியானது.
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வரும் 28 ஆம் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வாக்கு எண்ணிக்கை 31 ஆம் திகதி நடைபெற்று, வெற்றி பெற்றவர் யார் என்று தெரிவிக்கப்படும்.
இடைத்தேர்தலில் களமிறங்க பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.
வேட்பாளர் தெரிவு, ஆலோசனை கூட்டம் என அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது வேட்பாளராக களமிறங்க உள்ளார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளவர் சாகுல் அமீது என நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது.
2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.
ஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, பிரபாகரனின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார்.
பின்னர், பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது.
ராஜீவ் வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: சீமான் அதிரடி -
Reviewed by Author
on
January 05, 2019
Rating:

No comments:
Post a Comment