வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் : கேப்பாப்புலவு மக்கள் கவலை -
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் 863 நாட்களாக கேப்பாப்புலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
மக்களின் தொடர் போராட்டத்தின் பலனாக ஒருதொகுதி காணிகள் கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள தமது ஏனைய சொந்த நிலங்களையும் விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தாம் போராட்டம் நடத்திவரும் நேரத்தில் தம்மிடம் வந்து பல வாக்குறுதிகளை தந்த தமிழ் அரசியல் தலைமைகள் காணாமல் போயுள்ளதாகவும் தம்மை கைவிட்டுள்ளதாகவும் கேப்பாப்புலவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள், கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா கேப்பாபுலவு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாவிட்டால் அந்த மக்களுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிப்போம் என தெரிவித்திருந்தார்.
அத்தோடு ஒருமாதகாலத்தில் கேப்பாபுலவு மக்களின் நிலங்களை பெற்றுத்தருவோம் என சம்பந்தன் ஐயாவும் எம்மிடம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒருவரையும் இன்னும் காணவில்லை அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர்.
எமக்கு கிடைத்துள்ள தமிழ் ஆளுநர் சுரேன் ராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எம்மை சந்தித்து இது கேப்பாபுலவு மக்களுடன் எனது இறுதி சந்திப்பு இனி இராணுவத்துக்கும் மக்களுக்கும்தான் கதை என தெரிவித்துவிட்டு சென்றார்.
இன்றுவரை எமக்கு அவர்கூட தீர்வு தரவில்லை நாம் ஏன் இராணுவத்துடன் பேச வேண்டும்? நாம் எம்முடைய வல்லமையின் காரணமாக போராடுகின்றோம்.
நாம் இராணுவத்துடன் பேச வேண்டியதில்லை அந்த வேலையை செய்யவேண்டியவர் ஆளுநர்தான் எனவே முடிந்தால் அந்த வேலையை செய்து எமது நிலத்தை எமக்கு பெற்றுத்தாருங்கள்.
நாம் இன்று உள்ள அவசரகால சூழ்நிலையில் இராணுவ முகாமுக்கு முன்பாக அச்சத்துடன் போராடி வருகின்றோம். எமக்கு ஆதரவு வழங்க வருபவர்களுக்கும் இராணுவம் வேண்டும் என்றே கெடுபிடிகளை விதிக்கின்றது.
எமது நிலங்களில் உள்ள வருமானங்களை எமது கண்முன்னே இராணுவம் அனுபவிக்கின்றது. நாம் போர் முடிந்து 10 வருடங்களின் பின்னரும் இன்றும் அகதி வாழ்க்கை வாழுகின்றோம்.
இராணுவ எமது சொந்த நிலத்தில் இருக்க நாம் இன்னும் மாதிரிகிராமத்தில் வாழுகின்றோம் வரட்சி வாட்டி வதைக்கின்றது.
எந்த தொழிலும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சொந்த நிலங்களை இராணுவம் பறித்துவைத்திருக்க நாம் அடுத்தவரிடம் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எமது நிலம் எமக்கு வேண்டும் விரைவில் அந்த நிலம் எமக்கு கிடைக்க வேண்டும் அதுவரை நாம் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் அனைவரும் எம்மை கைவிட்டுள்ளனர் : கேப்பாப்புலவு மக்கள் கவலை -
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment