மன்னார் வங்காலை பறவைகள் சரணாலய பகுதியில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.
மன்னார் மாவட்டத்தின் அடையாளமாகவும், இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசமாகவும் காட்சியளிக்கும் வங்காலை பறவைகள் சரணாலய பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை தூய்மையாக்கும் நடவடிக்கை இடம் பெற்றது.
கறிராஸ் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தலைமையில்,மன்னார் கறிராஸ் வாழ்வுதயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினர் மிசறியோ நிதியுதவியுடன் குறித்த சரணாலயத்தை சுத்தம் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நகர சபையின் வழிகாட்டலில், மன்னார் வன ஐூவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து வாழ்வுதயப் பணியாளர்கள், இலக்கு கிராம இளைஞர்கள் பங்களிப்பில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன்'இது பறவைகள் சரணாலயம்' எனும் விளம்பரப் பலகையும், 'குப்பை போடுதல் தடை செய்யப்பட்டுள்ளது' எனும் பதாதைகளும் இத்திட்டத்தின் கீழ் பிரதான வீதிக்கு அருகாமையில் நாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சரணாலயத்தில் வரலாற்று முக்கியத்துவம், அழகின் மகத்துவம், புரியாத சிலர் தமது வீட்டுக்கழிவுகளை இங்கு கொட்டுவதும், பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள் என்பவற்றை இவ்விடத்தில் வீசுவதும் கவலைக்குரிய விடயமாகும்.
கழிவுப் பொருட்கள் இங்கு வாழும் உயிரினங்களின் உயிர் வாழ்தலுக்கும், இருத்தலுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தின் அடையாளமாகவும், இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசமாகவும் காட்சியளிக்கும் இச் சரணாலயத்தை பாதுகாக்க வேண்டியதும், பறவைகள், விலங்குகள் எனப் பல்லுயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவது எம் ஒவ்வொருவருடைய கடமையும், பொறுப்பும் ஆகும் என குறித்த சிரமதானத்தை ஆரம்பித்து வைத்த கறிராஸ் வாழ்வுதய பதில் இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தெரிவித்தார்
மன்னார் வங்காலை பறவைகள் சரணாலய பகுதியில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 18, 2023
Rating:

No comments:
Post a Comment