தமிழரசுக் கட்சியை ஒதுக்கி விட முடியாது; ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி
தமிழரசுக் கட்சியை ஒதுக்கிவிட முடியாது. ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (23.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்க்க மாட்டார்கள். அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம்.
பொதுவேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும். ஒருவரை நிறுத்திவிட்டு சொற்ப வாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடகவே அந்த விடயத்தை செய்யவேண்டும். பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி எமது மக்களும், நாங்களும் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.
ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். ஐ.நாவுக்கு கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுவது ஒற்றுமையக சேர்ந்து செய்தோம். எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம். ஒற்றுமை இல்லை எனில் நாம் வெற்றி பெற முடியாது.
எனவே அரசியல் கதிரைகளுக்காக உசுப்பேத்தும் வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அனைவரையும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.
எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், எமது மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்க வேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்ப்படும். அத்துடன் சர்வதேசத்தின் பார்வையினையும் பெறமுடியும். இதன்போது தென் இலங்கை எங்களை பார்த்து அச்சப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
தமிழரசுக் கட்சியினை நாம் ஒதுக்கிவிட முடியாது. பிரச்சனை தொடர்ந்து இருக்கின்றது. இந்த ஒற்றுமைக்குள் நாங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் பொதுச்சின்னம் என்பதே எமது கருத்து. பொதுச் சின்னமாக குத்துவிளக்கு அமைந்திருக்கின்றது. அவர்களோடு பேசி பொதுச் சின்னத்தின் கீழ் அணி திரள்வதற்கான முயற்சியினை நிச்சயமாக நாங்கள் மேற்கொள்ளுவோம். தனிப்பட்ட கட்சியின் கீழ் எமது ஒற்றுமை இருக்காது எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment