வங்கக்கடலில் உருவாகும் ரீமால் புயல்: இலங்கையை பாதிக்குமா?
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி புயலாக உருவாகக்கூடும்.
இந்த புயலுக்கு ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி "ரீமால்" என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் 26ஆம் திகதி மாலை மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை பாதிக்குமா?
இலங்கையில் குறித்த “ரீமால்” புயலின் தாக்கம் இருக்குமா என்பது பற்றி சரியாக விளக்கங்கள் எதையும் இலங்கை வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிடவில்லை.
ஆனாலும், அண்மைய நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானியையால் நாடளாவிய ரீதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment