இங்கிலாந்து நகரமொன்றின் மேயராக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை தமிழர்
இலங்கையைச் சேர்ந்த புகலிட கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானிய நகரமொன்றில் மேயராகவும், அந்தப் பதவியை வகிக்கும் முதல் இந்து என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் இளங்கோ இளவழகன் Ipswich Borough பேரூராட்சி ஆண்டு கூட்டத்தில் ஒருமனதாக மேயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சம்பிரதாயப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இளவழகன், "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் மேயராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
Ipswich Borough பேரூராட்சியின் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டனர், அத்துடன், வாரத்தின் பிற்பகுதியில் அருகிலுள்ள கோயிலில் கொண்டாட்டங்களும் திட்டமிடப்பட்டன.
இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை Ipswich Borough பேரூராட்சி நகரின் பன்முகத்தன்மையையும் பன்முக கலாச்சாரத்தையும் காட்டுகிறது என Ipswich இந்து சமாஜத்தின் தலைவர் சச்சின் கராலே தெரிவித்துள்ளார்.
இது குறித்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் வாழ்ந்து பணி செய்து பிரித்தானிய வந்தடைந்தார்.
இளவழகன் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள Ilfordக்கு குடிபெயர்ந்தார், எனினும், 2006 ஆம் ஆண்டில் Ipswichஇல் குடியேறினார்.
"நான் Ipswich வந்தபோது, மக்கள் மிகவும் நட்பாக இருப்பதை உணர்ந்தேன்," இதனையடுத்து Ipswich எனது சொந்த நகரம் என்று முடிவுசெய்தேன்” என இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.
"பல நாடுகளில் வாழ்ந்து பலவிதமான வாழ்க்கை முறைகளை அனுபவித்துள்ளதால், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
        Reviewed by Author
        on 
        
May 17, 2024
 
        Rating: 


No comments:
Post a Comment