சீன அரசின் பொருத்தும் வீட்டு திட்டம் எமக்கு வேண்டாம்: யாழில் கடற்றொழிலாளர் கோரிக்கை
சீன அரசின் பொருத்தும் வீட்டு திட்டம் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் சுழிபுரத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே, சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல.
நாங்கள் கடற்கரையினை அண்டித்தான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவளி காற்றினால் பொருத்து வீடு அழிய கூடும் இயற்கை அனர்த்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும் .
ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம். கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இழுவை மடியாலும் பாதிக்கபட்டுள்ளோம். பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும் மீனவ தொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றோம்.
நாங்கள் கடந்த காலங்களில் சீன அரிசி வழங்கப்பட்டதாகவும் அறிகின்றோம். அவை கடற்றொழில் மக்களுக்கு முழுமையாகவும் கிடைக்கப் பெறவில்லை. சிலர் இதில் இலாபம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.
அரசியல் ரீதியாக பலர் இலாபம் அடைகின்றனர். இன்றும் தரம் குறைந்த பொருட்கள் வருகின்றன. தங்க நகைகளை அடைவு வைத்தே எமது குடும்பங்கள் முதலீடு செய்கின்றன.
வங்கியிலும் நகைகள் ஏலத்தில் விலைப்படுகின்ற சூழல் ஏற்படுகின்றது . எமது சுழிபுரம் கடற்கரையில் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர்.
இவ்வாறான நேரத்தில் சமுர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்றொழிலாளர்களாகிய எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும்.
உண்மையில் எமக்கு சீன அரசு ஏமாற்றாது தரமான பொருட்களையும் திட்டங்களையும் வழங்கவேண்டும் . வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர்.
ஆனால் எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப் பெறவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment