பலாப்பழத்திற்காக தாயை பலமாக தாக்கிய மகன் இலங்கையில் நடந்த சம்பவம்
இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாயை அவரது மகன் பலமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் மொனராகலை, தொம்பகஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தாயார் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தாக்குதலுக்குள்ளான தாயாரும் அவரது கணவரும் தங்களது வீட்டையும் காணியையும் மகனிடம் ஒப்படைத்து சிறிய வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான தாயார் இரவு உணவு தயாரிப்பதற்காக, மகனிடம் ஒப்படைத்த காணியிலிருந்த பலா மரமொன்றிலிருந்து பலாப்பழம் ஒன்றை பறித்துள்ளார். இதன்போது, கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, மகன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment