பிரித்தானியாவில் கலவரங்களுக்கு மத்தியில் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே கடை வைத்திருந்த இலங்கையர் ஒருவரின் கடை, புலம்பெயர்தல் எதிர்ப்பாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
ஆனால், இதனையடுத்து ஒரு ஆச்சரியத்துக்குரிய நிகழ்வையும் அவர் சந்தித்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Southportஇல், மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பாலசூரிய (Chanaka Balasuriya) கடை ஒன்றை நடத்திவருகிறார்.
ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற, சிறிது நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் Southport தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள்.
பிரித்தானியாவில் ஏற்பட்ட பதற்றமான சூழலிலும் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | The Incident Happened To A Sri Lankan In Britain
தன் கடைக்கு அருகிலுள்ள மசூதி ஒன்றின் முன் போராட்டக்காரர்கள் கூடியுள்ளதை அறிந்த பாலசூரிய, தன் கையடக்க தொலைபேசி மூலம், தன் கடையின் சிசிரீவி கமெராவைக் கண்காணித்துள்ளார்.
அப்போது, அவரது கடையை உடைத்து நொறுக்கிய ஒரு கூட்டம், கடைக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியுள்ளது. கடைக்கு முன்னிருந்த குப்பைத்தொட்டிக்கு சிலர் தீவைத்துள்ளார்கள்.
ஆனால், அடுத்த நாள் காலை அருகிலிருந்த மக்கள், கடை முன் கிடந்த கண்ணாடித்துகள்களை சுத்தம் செய்வதையும், கடையை பழுது பார்ப்பதையும் கண்டு பாலசூரிய திகைத்து நின்றிருக்கிறார்.
11,000 பவுண்டுகள்
அவர்களிடம் தான் இதற்கு முன் பேசியது கூட இல்லை எனவும், இது எனக்கு ஆச்சரியமளித்துள்ளதாகவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலசூரியவின் கடையின் பக்கத்தில் சலூன் வைத்திருந்த ஒருவர், பாலசூரியவின் கடையை பழுது பார்ப்பதற்காக 11,000 பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையை சேகரித்துள்ளார்.
கட்டுமானப்பணி செய்யும் ஒருவர், உடைந்த ஜன்னல்களை இலவசமாக புதுப்பித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு வழக்கமாக ஐஸ்கிரீம் விநியோகிக்கும் ஒருவர், இலவசமாக ஒரு ஐஸ்கிரீம் அலுமாரியையே கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பாலசூரியவால் மீண்டும் தன் கடையை திறக்கமுடிந்திருக்கிறது. இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்துபார்க்கவில்லை என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பிள்ளைகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையிலும், வன்முறைக்கெதிராக சமுதாயம் எதிர்த்து நின்ற விடயம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது எனவும், எனக்கு உதவ மக்கள் கொடுத்த பணத்தைவிட, அவர்கள் எனக்கு செய்திகள் மூலமும், வாழ்த்து அட்டைகள் மற்றும் பூங்கொத்துக்கள் மூலமும் எனக்கு காட்டிய ஆதரவு என்னை நெகிழவைக்கிறது என அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு நம்பமுடியாத அளவில் அமைந்துள்ளது என்கிறார் அவர்.

No comments:
Post a Comment