மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும் இது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை-
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும்,இது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.எனவே மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்சனைகளுக்கும் நாட்டின் ஜனாதிபதி உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசேட ஊடக சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(6) மதியம் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கணிய மணல் அகழ்வு திட்டத்தை முன்னெடுப்பதற்கான பாரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது பல்வேறு கம்பனிகளால்.இறுதியில் ஒரு கம்பெனி ஒன்று கணிய மணல் அகழ்வுக்காக மன்னார் மாவட்டத்தில் கால் பதித்துள்ளது.குறித்த கம்பெனி குறித்த இடத்தை கையகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.
மக்கள் சார்பாக நாங்கள், பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற போதும்,குறித்த நடவடிக்கையை செயல்படுத்த பல்வேறு அரச நிறுவனங்களின் முயற்சியுடன் வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 14 ஆம் திகதி கணிய மணல் அகழ்வு செய்யப்படவுள்ள இடங்களை நிள அளவீடு செய்ய சுமார் 32 அரச திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதை மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றினைந்து முழுமையாக எதிர்க்க உள்ளோம்.மக்கள் ஒன்றிணைந்து முழுமையாக எதிர்ப்பை காட்ட உள்ளோம்.எனவே குறித்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சில செயல்பாடுகளையும் கவலையுடன் கூறிக் கொள்கிறேன்.சில வாரங்களுக்கு முன் ஒரு குழந்தையை பெற்றெடுத்த தாய் ஒருவர் அதிக இரத்தப்பெருக்கின்ற காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இறப்பிற்கான காரணம் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளோம்.
எழுத்து மூலம் வைத்தியசாலை தரப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.எமக்கும் பதில் அனுப்பி வைத்துள்ளனர்.துரித விசாரனைகள் இடம் பெற்று வருவதாகவும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக முழுமையான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளனர்.
மனிதர்களையும்,மனித உரிமைகளையும் மதிக்கின்ற வகையில் அனைத்து வைத்தியசாலைகளும் இயங்க வேண்டும்.குறித்த சம்பவத்திற்கான முழுமையான விளக்கத்தை வைத்தியசாலை தரப்பினர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதன் போதே மக்கள் வைத்தியசாலை,வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள்.
எனவே தவறுகளை நிவர்த்தி செய்யும் வகையில் உண்மை நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காணிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்ற தரவு எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.மேலும் மாவட்டத்தில் உள்ள இளையோர் சிறுதொழில் முயற்சிக்காக காணியை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.
சுமார் 800 இற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
-எனினும் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற,பணம் படைத்தவர்களுக்கு மக்களினுடைய காணிகள் பகிர்ந்தளிக்க படுகின்றதை கண்டிக்கின்றோம்.
கடந்த மாதம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராம பகுதியில் உள்ள சோள மண்டல குளம் பகுதியில் உள்ள காணிகள் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்த வருக்கும்,கொழும்பில் இருந்து வந்தவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இப்பகுதிகளில் விவசாயம் செய்து வந்த மக்களுக்கு உண்மையை கூறாது அவர்களுக்கு வழங்கி உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே உரிய அதிகாரிகள் தலையிட்டு மக்களுக்கு அக்காணியை பகிர்ந்தளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அவர் தெரிவித்தார்.
Reviewed by Author
on
August 06, 2024
Rating:


No comments:
Post a Comment