மன்னார் நகரசபை உறுப்பினர் ஒருவரால் நடைபாதை ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மன்னார் நகரில், மன்னார் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கடும் புகார்கள் எழுந்துள்ளன.
குறித்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு வணிக நிறுவனம், மன்னார் நகரசபை உறுப்பினர் இம்சாத் அவர்களின் உரிமையில் இருப்பதாகவும், அந்த கடை தனது வியாபார பரப்பளவை பொதுநடைபாதை மீது விரிவாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பயணிக்க வேண்டிய நடைபாதை இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நகரசபை உறுப்பினரே இவ்வாறான சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பது குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், மன்னார் நகரசபை நிர்வாகமும் இந்த ஆக்கிரமிப்புக்கு துணை போகிறதா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, குறித்த ஆக்கிரமிப்பு கடையை உடனடியாக அகற்றி, நடைபாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என மன்னார் நகரசபையிடம் பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
January 08, 2026
Rating:






No comments:
Post a Comment