தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் 23 எதிராக வழக்கு!
காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கும் நுகர்வோர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ ஆய்வுக்கூடங்கள் மற்றும் மருந்தகங்களை இலக்கு வைத்து விசேட விசாரணைகளும் சுற்றிவளைப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விசாரணைகளின் போது பொதுமக்களின் வாழ்க்கையிலும் சுகாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல தீவிர முறைகேடுகள் நுகர்வோர் சேவை அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த விசேட விசாரணைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது பிரதானமாகப் பின்வரும் குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன:
நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் காலாவதியான இரசாயனங்களைப் பயன்படுத்துவதும் பயன்பாட்டுக்காகத் தயாரித்து வைத்திருப்பதும்.
காலாவதியான மருந்து வகைகளை நோயாளி பராமரிப்புக்காகப் பயன்படுத்தி வைத்திருப்பதும் நுகர்வோருக்கு விற்பனை செய்வதும்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகூடிய விலைகளை விட ஆய்வுக்கூடப் பரிசோதனைகளுக்காக அதிக கட்டணம் அறவிடுதல்.
காலாவதியான இரசாயனங்களைக் காலாவதியாகாத இரசாயனங்களுடன் பிரிக்காமல் ஒரே இடத்தில் சேமித்து வைத்திருத்தல்.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் 23 எதிராக வழக்கு!
Reviewed by Vijithan
on
July 23, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 23, 2026
Rating:


No comments:
Post a Comment