கோஷ்டி மோதல் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் உட்பட மூவர் பலி! துமிந்த சில்வா படுகாயம்! ஊரடங்கு அமுல்!
கொழும்பு நகரின் புறநகர் பிரதேசமான கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது மெய்ப்பாதுகாவலரும் அடங்கலாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வாவின் தலையிலும், தோளிலும் இரண்டு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருப்பதாகவும், இவரது நிலைமை மோசமாக இருப்பதால் தற்போதைக்கு மேலதிக விபரங்களைத் தர முடியாது என வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துமிந்த சில்வா தரப்பினருக்கும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்றிற்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 10 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லேரிய பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் இடம்பெற்ற முல்லேரிய பிரதேசத்தில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முல்லேரிய ஐ.டி.எச். சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத்த லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாளை காலை 6.00 மணி வரையில் முல்லேரிய காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
பிரதேச மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லேரிய பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள துமிந்த சில்வாவின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்!
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலையில் இருந்து சத்திர சிகிச்சை மூலம் இரண்டு துப்பாக்கி சன்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கோஷ்டி மோதல் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் உட்பட மூவர் பலி! துமிந்த சில்வா படுகாயம்! ஊரடங்கு அமுல்!
Reviewed by NEWMANNAR
on
October 09, 2011
Rating:

No comments:
Post a Comment