முதலமைச்சர் நியமன அறிவித்தல் கிடைத்ததாக வடமாகாண ஆளுநர் த.தே.கூ.வுக்கு கடிதம் : மாவை எம்.பி.
வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் மற்றையதை சுழற்சி அடிப்படையில் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வழங்குவது எனவும் தீர்மானித்துள்ளோம்.
முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை எமது கட்சி ஏகமனதாக தீர்மானித்து வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளது என ஆளுநர் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ள நிலையில் எமது கட்சிக்கு கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் மற்றைய போனஸ் ஆசனத்தை மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுழற்சி முறையில் வழங்க எமது கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய ஐவரை சுழற்சி அடிப்படையில் நியமிக்கவுள்ளோம். இதற்கான உத்தியோகபூர்வ முடிவை நாளை (இன்று) எமது கட்சி அறிவிக்கவுள்ளது.
இதேவேளை எமது கட்சி உறுப்பினர்கள், மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஏகமனதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த அறிவித்தலை நாம் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்திருந்தோம். இந்த அறிவித்தலுக்கு அமைய தமக்கு குறித்த அறிவித்தல் கடிதம் கிடைத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக எமக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இன்னும் சில தினங்களில் வடக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அமைக்கப்படும். இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.
முதலமைச்சர் நியமன அறிவித்தல் கிடைத்ததாக வடமாகாண ஆளுநர் த.தே.கூ.வுக்கு கடிதம் : மாவை எம்.பி.
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:

No comments:
Post a Comment