தென்னிலங்கையில் பலருக்கு இன்று விக்னேஸ்வரன் காய்ச்சல் : பா.அரியநேத்திரன்
தென்னிலங்கையில் பலருக்கு இன்று விக்னேஸ்வரன் காய்ச்சல் பிடித்துள்ளதால் வடமாகாண சபை குறித்து சட்ட திட்டங்களை மீறிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் உள்ள இனவாதக்கட்சிகள் உள்ளிட்ட பலருக்கு இன்று விக்னேஸ்வரன் காய்ச்சல் பிடித்துள்ளதால் மாகாண சபை சட்டங்களை மீறிய பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகள் சில விக்னேஸ்வரன் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கப் போகின்றார் என உளருவதுடன் தென்னிலங்கை மக்களையும் குழப்பி வருகின்றனர்.
ஜனாதிபதி முன் விக்னேஸ்வரன் வடமாகாணசபை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தால் அது அரசாங்கத்தை கவிழ்ப்பதுடன் தமிழீழத்தை பிரகடனப்படுத்த உதவும் என சில இனவாதிகள் கோசம் போடுகின்றனர்.
நாங்கள் தமிழீழத்தை பிரகடனப்படுத்துவதாக இருந்தால் நாங்கள் வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தோடு இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த மாகாணசபை முதலமைச்சரும் ஆளுனரிடம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக வரலாறு இல்லை அனைத்து முதலமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.
இன் நிலையில் வடமாகாண சபை முதலமைச்சரை மாத்திரம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்கக்கூடாது என கூறுவதற்கு காரணம் தென்னிலங்கையில் பிடித்துள்ள விக்னேஸ்வரன் காய்ச்சலேயாகும்.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் அதனை காலம் காலமாக சிங்கள இனவாதிகள் விடுவதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று என்றார்.
தென்னிலங்கையில் பலருக்கு இன்று விக்னேஸ்வரன் காய்ச்சல் : பா.அரியநேத்திரன்
Reviewed by Admin
on
October 03, 2013
Rating:

No comments:
Post a Comment