ஈழ தமிழர் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெசோவில் ஆலோசனை
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் முன்னாள் அமைச்சர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் கொடுக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், டெசோ அமைப்பும் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை பலமுறை வலியுறுத்திய பிறகும், தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளை புறக்கணித்து விட்டு வெளியுறவுத் துறை மந்திரி சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் ஆகிவிட்டது.
இலங்கை ஜனாதிபதிக்கு, இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டது தமிழ் இனத்தை அழிக்க முயலும் இலங்கை ஜனாதிபதிக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் நடவடிக்கை என்று டெசோ கருதுகிறது.
இனியாவது மத்திய அரசு இலங்கை மனித உரிமை மீறல் போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை வடக்கு, கிழக்கு மாகாண அரசுகளுக்கு அனைத்து அதிகாரமும் கிடைக்க வேண்டும். முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசுக்கு கண்டனம் என்பன உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈழ தமிழர் பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெசோவில் ஆலோசனை
Reviewed by Author
on
November 18, 2013
Rating:

No comments:
Post a Comment