அண்மைய செய்திகள்

recent
-

ராஜீவ் கொலை வழக்கு; சுப்பிரமணியன் சாமியைக் கைது செய்ய கோரிக்கை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுப்பிரமணியன் சாமியைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என தமிழர் களம் அமைப்பின் தலைவர் அரிமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'கடந்த 22 ஆண்டுகளாக ஒட்டு மொத்தத் தமிழினமும் ராஜீவ்காந்திப் படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் இவர்கள் இல்லை என்றும், சர்வதேசச் சதித்திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்றும் காட்டுக் கூச்சல் போட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய்விட்டது. 

 தூக்குக் கயிறு இன்றா? நாளையா? என்ற மரண வேதனையை மூன்று தமிழர்களுக்கும் வாழ்நாளின் இறுதிவரை சிறைக் கொட்டடியை அனுபவித்தே தீர வேண்டும் என்ற கொடுமையை நளினியும் அனுபவித்து வரும் வேளையில் வழக்கை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்த தியாகராஜன் என்ற உயரதிகாரி, நான் தவறாக பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தேன் என்று 22 ஆண்டுகள் கழித்து உளச்சான்று உருத்த இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். 

இதன் பிறகாவது கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருக்கும் நீதி இந்த நாட்டில் நிலை பெற வேண்டுமென்றால் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மரண தண்டனைச் சிறையாளிகளையும் வாழ்நாள்; தண்டனை பெற்ற நளினியையும் உடனே விடுதலை செய்திட வேண்டும்.
 
அது மட்டும் போதாது.  ராஜீவ் காந்தியைக் கொன்ற உண்மையான குற்றவாளிகள் யார்? என்பதையும் கண்டறிய வேண்டும்.  சுப்பிரமணியன்சாமி உள்ளிட்ட சிலரை கைது செய்து பக்கச் சார்பற்ற அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால் மட்டுமே உண்மை உலகிற்குத் தெரியவரும். 

அப்பாவிகளை உடனே விடுதலை செய்து கொலையாளிகளை உடனே கைது செய்ய தமிழர் களம் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு; சுப்பிரமணியன் சாமியைக் கைது செய்ய கோரிக்கை Reviewed by Author on November 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.