ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது - பந்துல உறுதி
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் புனர் நிர்மாண பணிகளுக்காக தெற்கு மக்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளார்கள். எனவே, ஆனையிறவு புகையிரத நிலையம் என்ற பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் தெற்கிற்கும் வடக்கிற்கும் உறவுப் பாலமாக அமையும் தொனிப்பொருளில் வாசகம் ஒன்றை பொறிக்கப்படும் எனவும் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களது உரிமைகளுக்கு பாதகம் அல்லது குந்தகம் விளைவிக்கப்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம். மாறாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக அரசாங்கம் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடுகின்றவர்கள் என்று அர்த்தமில்லை. எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் அநீதியிழைக்கப்படுகின்ற பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்துவதற்குமே நாம் அரசுடன் இணைந்திருக்கின்றோம்.
அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுக்கலாம். ஆனால், வேறேதும் செய்யமுடியாது எனவே தான் அரசுடன் இணைந்து மக்களது தேவைகளை உணர்ந்து நாம் சேவையாற்றி வருகின்றோம். இது ஒரு அரசியல் சாணக்கியம்.
நான் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்திருக்கின்றேன். அதேபோன்று மேலும் பல சேவைகளை செய்திருக்கின்றேன். அதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து எனது மக்கள் சேவையினை தொடர்ந்துள்ளேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது மக்களுக்கு நீண்ட காலமாக சேவையாற்றிவரும் மிகப்பெரிய அமைப்பாகும். எனவே, அதனோடு இணைந்து சேவையாற்ற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது - பந்துல உறுதி
Reviewed by Admin
on
January 05, 2014
Rating:

No comments:
Post a Comment