மன்னார் பெரியகடையில் மதுச்சாலையை அகற்றக் கோரி 17இல் ஆர்ப்பாட்டம்
மன்னார் மாவட்டத்தின் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் ஒருவரின் வீட்டில் திறக்கப்பட்டுள்ள மதுபானச்சாலையை அகற்றுமாறு கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெரியகடை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ரி.இன்பராசா தெரிவித்தார்.
பெரியகடை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பெரியகடை பொது மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்ப்பதற்காக 12 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி மதுபானச்சாலை கடந்த 06ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
இதனால், பெரியகடை கிராம மக்கள் அச்சத்துடன் இருப்பதுடன், இங்கு கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பெரியகடை கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகரசபை உறுப்பினர்களான இ.குமரேஸ், எஸ்.டிலான், என்.நகுசீன், மன்னார் செபஸ்ரியார் தேவாலய உதவி பங்குத்தந்தை டெலன்ஸ் குலாஸ், பெரியகடை ஜும்மா பள்ளிவாசல் மௌலவி எம். முகம்மத் சஜித், பெரியகடை மாதர் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார் பெரியகடையில் மதுச்சாலையை அகற்றக் கோரி 17இல் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 10, 2014
Rating:

No comments:
Post a Comment