இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது-அமைச்சர் றிசாத் பதியுதீன்.-Photos
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்துக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கூட்டத்தின் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்திய பிரதமர் இந்திய அரசாங்கத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மடு- தலைமன்னார் புகையிரத சேவையை வைபவ ரீதியாக 14 ஆம் திகதி காலை 10.45 மணிக்கு ஆரம்பித்து வைப்பார்.
இந்த ஆரம்ப நிகழ்வு தலைமைன்னார் பியர் புகையிரத நிலையத்தில் இருந்து இடம்பெறும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் வன்னி மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பிரதேசத்தில் மகத்தான வரவேற்பும் அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் ஒருவர் மன்னாருக்கு வருவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றுஎன்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியதுடன், வன்னி மாவட்ட மக்களின் நன்றிகளையும் அவர் இதன் போது இந்திய அரசுக்கு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார், மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,நெடுஞ்சாலைகள் அமைச்சின் பொது முகாமையாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொறியியளாலர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடபத்தக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது-அமைச்சர் றிசாத் பதியுதீன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 10, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment