பிராந்திய அதிகாரம் கைக்கு வந்த பின்னர் மத்திய அரசாங்கம் பற்றி பரிசீலிப்போம் – இரா. சம்பந்தன்
பிராந்திய சுயாட்சியைப் பெற்ற பின்னரே மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்கவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை – மூதூர் ஈச்சிலம்பற்று, வட்டவான் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப்பெறாமல் மாகாண சபையில் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன் போது இரா. சம்பந்தனிடம் கேள்வியெழுப்பினர்.
இரா. சம்பந்தன் தெரிவித்ததாவது;
மாகாண ரீதியாக எமது மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும். எமது மக்கள் தனிப்பட்ட மக்கள். அவர்களுக்கு ஒரு கலை, கலாசாரம், மொழிப் பாரம்பரியம் உண்டு. அந்த வகையில், அவர்களுக்கு ஒரு அரசியல் அந்தஸ்த்து கிடைக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தில் நாங்கள் சேர்வது பற்றி துரிதமாக செயற்படாமைக்குக் காரணம் பிராந்திய சுயாட்சியை நாங்கள் பெற வேண்டும். பிராந்திய சுயாட்சியைப் பெற்று எமது மக்களின் கைகளில் அதிகாரம் வந்த பின்னர் மத்திய அரசாங்கத்தில் சேர்வதா, இல்லையா என்பதைப் பற்றி பரிசீலிப்போம்.
என்றார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்பது தொடர்பிலும் இதன் போது கேள்வியெழுப்பப்பட்டது.
இந்த அரசாங்கம் தொடருமாக இருந்தால் அதைப்பற்றி பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்படும் என குறிப்பிட்ட அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடி அந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையாக செயற்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இரா. சம்பந்தன் இதன்போது தெரிவித்தார்.
பிராந்திய அதிகாரம் கைக்கு வந்த பின்னர் மத்திய அரசாங்கம் பற்றி பரிசீலிப்போம் – இரா. சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
March 05, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 05, 2015
Rating:


No comments:
Post a Comment