தமிழ் - முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் பிரிக்கப்பட்டுள்ளனர் – கிழக்கு முதலமைச்சர்...
கடந்த 30 வருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் தமிழ்-முஸ்லிம் மக்கள் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதை இரு இனங்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று(21) மாலை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே உறவுகள் பிரிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளும் முஸ்லிம் - தமிழ் என பிரிக்கப்பட்டுள்ளன. எங்களை பாடசாலை ஆரம்பம் முதலே திட்டமிட்ட வகையில் பிரித்துள்ளனர். இவ்வாறான இன முறுகல்கள் எங்களுக்குள் திட்டமிட்டு புகுத்தப்பட்டிருந்ததை அறியாதவர்களாக நாங்கள் உள்ளோம்.
இதனை பேசுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருப்பதானது பாடசாலைகளையும் தங்களது இனவாத பேச்சுக்கான இடமாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். இனத்துக்காக பேசுகின்ற விடயம் என்பது இனவாதமாக பேசுவது என்பதில் இருந்து மாறுபட்டுள்ளது. இனத்துக்காக பேசுகின்றோம் என்று இனவாதத்தினை எங்களுக்குள் புகுத்தியுள்ளனர். இனவாத பேச்சுகளில் அதிகமாக காணப்படுவது பொய்யாகவே உள்ளது.
இன்று மகிந்த ராஜபக்ஸவின் குழுவினர் அதனையே செய்துவருகின்றனர்.பொய்யும் புரட்டுகளுமே அவர்களிடம் அதிகமுள்ளது.இனத்துக்காக குரல்கொடுக்கவேண்டிய தேவை ஒவ்வொரு இனத்துக்கும் உள்ளது.இனவாதத்தை தூண்டுகின்ற பேச்சுகளை தடைசெய்யவேண்டிய தேவை இந்த நாட்டில் உள்ளது.
நாங்கள் 35 வருடங்களுக்கு பின்னர் தமிழ், முஸ்லிம் கலாசாரங்களை முன் நோக்கி நகர்த்துகின்ற செயற்பாடுகளை இன்று நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அந்த மக்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை பறைசாற்றும் வகையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வுகளில் இளம் கலைஞர்களினதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்தின் முழுமையான பங்களிப்புடன் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த தமிழ் இலக்கிய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் - முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் பிரிக்கப்பட்டுள்ளனர் – கிழக்கு முதலமைச்சர்...
Reviewed by Author
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment