அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்-முன்னாள் எம்.பி .எஸ்.வினோ நோகராதலிங்கம்-
மன்னார் மாவட்டம் 42 வருடங்களுக்கு பிறகு தேசியக்கட்சி ஒன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ் தலைமைகளும்,மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
-நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் பற்றி கேட்ட போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தமிழ் கட்சிகளிடமும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளிடமும் காணப்படும் ஒற்றுமையீனமே இந்த பரிதாபகரமான வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் காரணமாக இருக்கின்றது.
1976 இல் நடைபெற்றபாராளுமன்ற இடைத்தேர்தல் ஒன்றில் சிலபத்துவாக்குகளால் ஐக்கியதேசியக் கட்சிவெற்றிபெற்றது.
அதன் பின்னர் 42 வருடங்கள் பின் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியிடம் மன்னார் மாவட்டம் பறிபோயுள்ளது.
இது மன்னாரில் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது.
இதன் விளைவுகள் தமிழ் மக்களின் அரசியல் எதிர் காலத்தை புரட்டிப்போட்டு விடப்போவதை நாம் சாதாரணமாக எடுத்துவிடமுடியாது.
இந்த நிலை தொடர்ந்தால் எமது அரசியல் உரிமைக்கான பயணம் அஸ்தமிக்கப்பட்டுகையறு நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.
எமதுமக்கள் சரியானஅரசியல் பாதைதெரியாமல் தடுமொறிக் கொண்டிருப்பதையும்,தடம் மாறிச் சென்றுகொண்டிருப்பதையும் தமிழ் தலைமைகள் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கமுடியாது. அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவோம்.
இந்த நோய்க்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட வேண்டும்.
உடனடி அவசரசிகிச்சை செய்து கொள்ளப்படாவிட்டால் அரசியல் உரிமைக்கான உயிர்ப்பை மரணப்படுக்கையிலிருந்து காப்பாற்ற முடியாது போகும்.
முதலில் மக்கள் மத்தியில் எழுந்து வரும் அரசியல் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும், ஏனைய தமிழ்க் கட்சிகளிடமும் வரவேண்டும்.
அரசியல் தவறுகள் ஆராயப்பட வேண்டும்,திருத்தப்படவேண்டும்.
தமிழ் தலைமைகள் ஒன்று பட்டிருக்க வேண்டும் எனகோருகின்ற போதெல்லாம் நாம் மேலும் மேலும் உடைந்து சிதறிப்போகின்றோம்.
மன்னாரில் ஒரு மாகாண அமைச்சர் உட்பட 3 மாகாணசபை உறுப்பினர்களையும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்ற போதும் ஒரு அமைச்சரையும் ஒரு மாகாணசபை உறுப்பினரையும் கொண்ட ஐ.தே.கட்சியினால் மன்னாரின் அரசியல் தலைமை தமிழ்கட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.
இதற்கான தார்மீக பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
தேசியக் கட்சி ஒன்றிடம் மன்னாரை தாரைவார்த்துக் கொடுக்க ஒன்றும் அவர்களை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும் இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் நடைபெற இருக்கின்ற தொகுதிவாரியான மாகாணசபைத் தேர்தலிலும் மன்னாரின் மூன்று தொகுதிகளையும் மிக இலகுவாகவும், பரிதாபகரமாகவும் தேசியக்கட்சிகளிடம் தாரைவார்த்துக் கொடுக்கும் கைங்கரியத்தையும் செய்துவிட்டுச் செல்லட்டும் எனவும் கவலையுடன் தெரிவித்தார்.
அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்-முன்னாள் எம்.பி .எஸ்.வினோ நோகராதலிங்கம்-
Reviewed by Author
on
February 21, 2018
Rating:

No comments:
Post a Comment