உயர்தரப் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் -
தற்போது நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சையில் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் பல பகுதிகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவை அகற்றும்படி பரீட்சை மேற்பாளர்களால் உத்தரவிடப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பரீட்சை எழுத வரும் மாணவிகளை பரீட்சைக்கு சில நிமிடங்களுக்கு முன் இவ்வாறு நடத்தியதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களினால் பரீட்சை வினாத்தாளில் கவனம் செலுத்த முடியாது போயுள்ளது. இது அந்த மாணவிகளின் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு மாணவிகளின் பர்தாவை அகற்ற சட்டத்தில் இடமில்லை, அவர்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம் சோதனை செய்யலாம். ஆனாலும் இவ்வாறான சோதனைகளை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் செய்திருக்க வேண்டும்.
எனவே இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஆராயும்படி பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதோடு இவ்வாறான சந்தர்பங்களில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எந்த பரீட்சை மேற்பாளராவது சட்டத்துக்கு முரணான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை நிலையங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் -
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment