இந்து ஆலயங்களுக்கு எதிராக பௌத்த துறவிகளின் அட்டகாசம்! ஜனாதிபதி மைத்திரியின் முக்கிய உத்தரவு -
கன்னியா, முல்லைத்தீவு நீராவியடி கோவில், மலையகத்தின் குறிப்பிட்ட ஆலயங்களை இலக்கு வைத்து பௌத்த துறவிகள் குழப்பம் விளைவித்து வருகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலதிகமாக தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் உமா மகேஸ்வரன், அமைச்சர் மனோ கணேசனின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள் வருமாறு
கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரைகளையும் அமைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
32 பேர் கொண்ட தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் சிங்கள பெளத்த வரலாற்று ஆசிரியர்கள் செயற்படுகின்றனர். இவர்களுடன் மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனோ சமர்ப்பிப்பார்.
கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதை தடை செய்ய தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.
இந்த திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்கள பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடை செய்ய வேண்டும்.
முல்லைத்தீவு நீராவியடி கோவில் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அப்படி அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்கு புறம்பானது என தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.
கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பாரமரிக்க, தொல்பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்த பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகிறார்.
இந்நிலையில் கிணறுகளை பாரமரிப்பது யாரென தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தை கூட்டுவார்.
மலையகத்தில் கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விஹாராதிபதி ஏற்றியது பிழையானது.
பெளத்த பிக்குகள் சட்டத்தை கையில் எடுப்பது பிழை. இந்த பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்து ஆலயங்களுக்கு எதிராக பௌத்த துறவிகளின் அட்டகாசம்! ஜனாதிபதி மைத்திரியின் முக்கிய உத்தரவு -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:
Reviewed by Author
on
July 19, 2019
Rating:


No comments:
Post a Comment