இலங்கை தீவில் அதிகரித்துள்ள வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் குழந்தைகள் மீது கவனம் வேண்டும் எச்சரிக்கை
இலங்கை தீவில் தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதுடன் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனால், தற்போதைய வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும்.
செயற்கை இனிப்பு பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம். சர்க்கரை அதிகமாக கலந்த பானங்களை குடிப்பதால் வேறு நோய்களுக்கு இலக்காக வேண்டிய நிலையும் ஏற்படும்.
வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் வெயிலில் சுற்றித்திரிவது போன்ற விடயங்களை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.
வெப்பம் உச்சத்தில் இருக்கும் பொழுது, கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம். தற்போதைய சூழ்நிலையில், இயற்கை திரவங்களை அதிகம் குடிப்பது மிகவும் அவசியம். அதிகமாக சுத்தமான குடிநீரை பருகுங்கள்.
குறிப்பாக, குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள், ஆரஞ்சு நீர், இளநீர் மற்றும் இயற்கை பானங்கள் அருந்துவது மிகவும் அவசியம்.
நாளொன்றுக்கு இரு தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது மிகவும் அவசியம் எனவும், சிறு குழந்தைகளையும் நாளொன்றுக்கு இரு தடவைகள் குளிக்கச்செய்வதும் சிறந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment