மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய மேலும் இருவர் கைது
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27 மற்றும் 41 வயதுடைய அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் அதற்கான சுவரொட்டிகளை உருவாக்கி அச்சிட்டு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்தை உள்ளடக்கி அவரை அவமதிக்கும் வகையில் சிலர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விளம்பரம் செய்தமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி மடபாத, மாத்தளை மற்றும் பன்னிபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
October 03, 2024
Rating:


No comments:
Post a Comment